Sunday, December 30, 2012

பெண்கள்


எங்களை

மலர்  என்றீர்கள் கசக்கி எறிந்துவிடுகிறார்கள்

மயில் என்றீர்கள் தோகையை பாதுகாக்க படாதபாடு படுகிறோம்

மார்கழி பனி  என்றீர்கள் எப்போது கரைவோம் என்று எமக்கே தெரிவதில்லை



திங்கள் என்றீர்கள் தேய்ந்து கொண்டே தான் இருக்கிறோம் வளர்ந்த பாடில்லை

தென்றல் என்றீர்கள் சுதந்திரமாய் எங்களால் சுற்றிதிரியமுடிவதில்லை

தெய்வம் என்றீர்கள் நாடு கடத்தி நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்



அன்னப்பறவை என்றீர்கள் சிறகொடித்து விடுகிறார்கள்

அழகான ஓவியம் என்றீர்கள் அமிலம் ஊற்றி அழித்துவிடுகிறார்கள்

அரும்பும் தளிர் என்றீர்கள் பள்ளிப்பருவத்தை கூட முடிக்கவிடுவதில்லை



கவிதை என்றீர்கள் கானம் என்றீர்கள் எங்கள் உணர்வுகளைப்
படிக்கத்தான் ஒருவருக்கும் தெரிவதில்லை

நாம் செய்த குற்றம் தான் என்ன??

பெண்ணாக பிறந்ததா இல்லை பெண்மையோடு பிறந்ததா??

இல்லை உடலால் உறுதியற்றுப் பிறந்ததா??

இனியாவது எங்களை அதிகமா சூரியனோடு ஒப்பிடுங்கள்

 சுடும் என்ற பயத்திலாவது

சில மிருகங்கள் எம்மை நெருங்காதிருக்கட்டும்.