Saturday, September 14, 2013

தாயுமானவனுக்காக ஒரு பதிவு.



1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்.

6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.


இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி
தியாகம் செய்த தாயுமானவன்
என் தந்தை!

-ஆதிரா.

Thursday, August 29, 2013

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.




1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள். உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

 உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.


Tuesday, July 23, 2013

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..





1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

Tuesday, June 25, 2013

தமிழனாய் பிறந்ததென்ன அத்தனை பெரியக் குற்றமா??







அணுகுண்டு வைக்கல
ஆயுதம் ஏந்தல
ஆள் கடத்தலும் செய்யல

உணவுக் கலப்படம் செய்யல
ஊர் சொத்த கொல்லையடிக்கல
ஊழல் செஞ்சும் பிழைக்கல

மது விக்கல மாதுவும் விக்கல
மதக் கலவரமும் செய்யல

பேருந்தைக் கொளுத்தல
மரத்தை வெட்டல
எவனோ உள்ளப் போனதுக்கு
எவன் உயிரையும் நாங்க எடுக்கல

அடிமையா வாழல எவரையும்
அடிமையாக்கவும் முயற்சிக்கல

செய்ததெல்லாம் ஒன்று..


உயிர் வாழ பிழைப்பைத் தேடி
கடலுக்குள் சென்றோம்..
எல்லைத் தாண்டினோம் என
எளிதில் பறிக்கப்பட்டது எங்கள்
உயிர்..


உலகிலேயே இவ்வளவு துச்சமாக அற்பக் காரணம் சொல்லிக் கொல்லப்படும் உயிர் தமிழக மீனவனுடையது மட்டுமே. எல்லை தாண்டினார்கள் சுட்டோம் என்றுச் சொல்லுவதை விட, இலங்கை அரசுக்கு பொழுது போகவில்லை, கடலுக்கு வேட்டைக்கு வந்தோம் என்றுச் சொல்லுங்கள். பொருத்தமாக இருக்கும்.

Sunday, June 23, 2013

எதிர் மறையில் இருக்கும் நேர்மறை தெரிந்தால் எல்லாம் இங்குச் சுகமே !!




அழுவதுக் கூடச் சுகம் தான் 
அழவைத்தவரே அருகில் இருந்து 
சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான் 
காக்கவைத்தவர் அதற்கு தகுதி 
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை 
இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான் 
சட்டென முடிக்கு கொண்டு வரும் 
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர் 
முகத்தில் புன்னகையை மட்டும் 
வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும் 
அக்கறையையும் மட்டும் 
வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான் 
விவாதத்தை விட உயர்ந்தது உறவு 
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான் 
உண்மையான அன்புக் கொண்ட  நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான் 
முயற்சியின்  தீவிரத்தை இன்னும் 
அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான் 
தவறாமல் தவறிலிருந்து பாடம் 
கற்றுக்  கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான் 
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத் 
தேடித் தெரிந்து நம்மைத்  தேற்றிக் கொண்டால்...




Saturday, June 1, 2013

வாழ்க்கை அனைத்தையும் கற்றுத் தரும் வாழவும் கற்றுத் தரும்.


இன்று வகுப்பில் இருக்கையில் என் அம்மாவிடம் இருந்து missed cal மேல் missed cal .வகுப்பு முடிந்ததும் , வெளியே வந்து call பண்ணி என்னம்மா என்றால் ,  "  நம்ம பவி  (என் அத்தை  மகள் ) உனக்கு உடனே போன் பண்ண சொல்லி ஒரே தொல்லை".இவ்வளவு நேரம் காத்திருந்து இப்ப தான் வீட்டுக்கு போனான்னு சொன்னாங்க.ஏன் மா ன்னு கேட்டேன்.அவள் 456 மதிப்பெண் எடுத்திருக்கா, இப்ப தான் ரிசல்ட் வந்துச்சு, அவ என்ன படிக்கறதுன்னு இப்பவே உன்னட கேக்கனுமான்னு சொன்னாங்க.சரி மா நான் வீட்டுக்கு போய் பொறுமையா அவ கிட்ட பேசறன்னு சொன்னேன்.நான் என்ன மார்க் எடுத்தேன்னு பவி கேட்டடிருப்பா கண்டிப்பா , அதுக்கு நீ என்னமா பதில் சொன்ன என்றுக் கேட்டேன்.நான் பத்தாவது எழுதி வருடங்கள் பத்தாகி விட்டதால் அம்மா நிச்சயம் மறந்திருப்பார் என்றறிவேன்.


எங்க பவியின் இப்போதைய ஆர்வம் அவள் என்னை விட அதிகம் மார்க் எடுத்திருக்கிறாளா? என்பதை தெரிந்துக் கொள்வது தான்.இந்த உண்மை புரியாத அம்மா ,  தன் பிள்ளையை விட்டுத் தராமல் அவள் (நான்) 466 மதிப்பெண் பெற்றாள் என்றுத்  தவறாக சொல்லி விட்டார்.அவ்வளவு தான் ,எங்க பவியின் அழகிய முகம் சட்டென  எப்படிச் சுருங்கிருக்கும் என்று என்னால் கற்பனைச் செய்ய முடிகிறது.

பவி வந்தால் அவள் என்னை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்திருக்கிறாள், நான் வாழ்த்துச் சொன்னேன் என்றுச் சொல்லி ஊக்கப் படுத்து மா .அவள் இன்னும் சந்தோசப் படுவாள் என்றுச் சொல்லி முடித்து போனை வைத்தேன்.


மாலை வீடு திரும்பிய பின், எங்க அத்தை வீட்டுக்கு போன் பண்ணி பேசினேன்.பவியை மேற்கொண்டு எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற கேள்விக்கு என்னால் முடிந்த வரை எங்க ஊர் பள்ளிகளை ஆராச்சி செய்து ஆலோசனை மட்டும் சொல்லி, அவர்களை முடிவு செய்து கொள்ளச் சொன்னேன்.நான் ஊரைப் பார்த்து வருடங்கள் பல ஆகுது. எல்லா பள்ளிக் கூடங்களும் நான் பார்த்த நிலைமையில் தான் இருக்கா?இல்லை மாற்றம் உண்டா என்றறியேன்.என்னால் முடிந்த வரை நல்ல ஆலோசனை சொல்ல முயற்சித்தேன்.


பவி லைன்லில் வந்ததும், வாழ்த்துச் சொன்னேன்.பள்ளியில் யாரடி முதலிடம்? வட்டார முதலிடம் (Regional first ) எந்தப் பள்ளிப்  பெற்றிருக்கிறது.அவள் படிக்கும் (அங்கு தான் நானும் படித்தேன் ) பள்ளி முதலிடம் பெறுவது தான் வழக்கம்.முதலிடம் பற்றிய விவரம் அறிவதில் எனக்கு ஆர்வமில்லை.அந்த விவரங்களை பவி அறிந்திருக்கிராளா? என்பதே என் ஆர்வம்.


பவி," அதெல்லாம் யாருக்குத்  தெரியும்.நான் அதுலாம் பாக்கல, யார் வந்தா நமக்கென்ன ? என்றால்.சபாஷ், மிகச் சரியான பதில்.இந்த பதிலை தான் நான் விரும்புகிறேன். ஆக, இவளுக்கு யார் மதிப்பெண் மீதும் ஆர்வமில்லை, என்னைய விட மிஞ்சிட்டமானு மட்டும் செக் பன்னிருக்கான்னு புரிந்தது.


பெற்றோர் பிள்ளைகளுக்கு  அடுத்தவரை ரோல் மாடலாய் காட்டுகிறோம் என்ற பெயரில் அடுத்தவருடன் ஒப்பிடும் விளைவே பிள்ளைகள் தங்களைத் தாங்களே அடுத்தவருடன் ஒப்பிட்டுக் கொள்வது .  என் அத்தைக்கும் மாமாவுக்கும் பவித்ரா என்னை போல் வர வேண்டும் (நான் ஒன்றும் கிழித்து விட வில்லை, என் குடும்பத்தைக்  காக்கும் கடமை எனக்கு தரப்பட்டிருப்பதாக இளவயதிலேயே உணர்ந்தேன். அதற்காக முயற்சிக்கிறேன், அவ்வளவு  தான் ). பொருளாதாரத்தால் நலிவடைந்து இருக்கும் அந்தக் குடும்பத்தையும் பவி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பை அவள் என்னிடம் இருந்து கற்க வேண்டும் என்பதே என் அத்தை மாமாவின் விருப்பம்.ஆனால் அதற்கு அவர்கள் கையாளும் முறை தான் தவறு.



அடிக்கடி என்னை உதாரணம் காட்டுகிறேன் என்ற பெயரில் ஆதி யை போல் வர வேண்டும்,அவளால் தான் நம்ம அத்தை இன்று  சந்தோசமாக இருக்கிறாள், அப்படி இப்படி என அளந்து விடுவது.என்னைக் கண்டாலே 8 வது படிக்கும் என் மாமா பையன் (பவித்ராவின் தம்பி)பேயைப் பார்ப்பது போல் பயந்து ஓடுகிறான்.தொலைபேசியில் கூடப் பேசுவதில்லை.நான் அவன் படிப்பு, மதிப்பெண் என்று கேள்வி கேட்டு அவனை துன்புறுத்துவேன் என்றப்  பயம்.அப்பனா பாத்துகோங்க எந்த அளவுக்கு என்னைய பத்தி பில்ட் அப் பண்ணிருப்பாங்கன்னு. !! 


பவித்ரா என்றும் ஆதிரா ஆக முடியாது , ஆதிரா என்றும் பவித்ரா ஆக முடியாது என்பது தானே நிதர்சனம்.பெற்றோரின் துன்பங்களை பார்த்தே வளரும் பிள்ளைகள் எந்தச் சூழலிலும் பாதை தவறாது.கவனம் சிதறாது.அவர்களுக்கு எந்த உதாரணமும், ரோல் மாடலும் தேவைப் படாது.அப்படி தான் , பவிக்கும் எதுவும் தேவை இல்லை.அவள் நிச்சயம் பொறுப்பான,ஊர் மெச்சும் பிள்ளையாக வருவாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.நான் அவள் பக்கம் இல்லை என்றால் கூட,நிச்சயம் வருவாள்.


பவிக்கு என் ஆலோசனை எல்லாம் "பாதை உன்னுடயைது.தேர்வு செய்யும் உரிமை உன்னுடையது. உனக்கு முன்பே அந்தப்  பாதையை கடந்தவள் என்ற முறையில், கற்கலும் முட்களும் இருந்தால், பாத்து நட என்று உன் கை பிடிக்கும் கடமை மட்டுமே என்னுடையது ".

பெற்றோர்களே திருந்துங்கள. பிள்ளைகளை எவருடனும் ஒப்பிடாதீர்கள்.அவர்களை ஊக்கப் படுத்துவதாக இருந்தாலும் சரி தாழ்வு படுத்துவதாக இருந்தாலும் சரி, ஒப்பிட வேண்டாம்.அது ஒரு போதும் அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவாது.வழிகாட்டல் வேறு , ஒப்பீடல் வேறு.முடிந்தால் நீங்கள் சிறந்த வழிகாட்டியாய் இருங்கள், இல்லை சிறந்த வழிகாட்டியை உருவாக்கித் தாருங்கள். கல்வி விடயத்தில் பிள்ளைகளை அவர்கள் வழியில் விடுங்கள்.வாழ்க்கை அனைத்தையும் கற்றுத் தரும் வாழவும் கற்றுத் தரும்.

Thursday, May 23, 2013

ஏதொ தெரியாத் தனமாக் கிறுக்கிட்டேன்..வந்துக் கொஞ்சம் படிங்களேன் ப்ளீஸ்..




ஓர்  மாலை மஞ்சள் நேரத்திலே 
மாமரத் தோப்பினிலே 
மாங்குயில் இசைக்கையிலே 
மாமனவன்  அருகினிலே 
மங்கை இவள் நாணத்திலே 
மயங்கி நின்றால் மனதினிலே 

மண்ணைப் பார்த்து நின்றவளை 
மனக் கண்ணில் எடைப் போட்டவன் 
அவள் மல்லிகைப் பூ வாசத்திடம் 
மனமே நீ சிக்கிடாதே என மனதுக்குள் 
நொந்துக் கொண்டான் மெல்ல உள்ளே 
சிரித்துக் கொண்டான்..

தடைப் போட்ட வெட்கத்தை 
தள்ளிக் கொஞ்சம் வைத்தவள் 
தன் மன்னவன் முகம் பார்க்க 
மைவிழி ஏரெடுத்து  அவன் 
மௌனம் .களைய முறையிட்டாள்..

மௌனம் கலைந்த மன்னவன் 
முல்லை பூ சிரிப்புடன் முதலில் 
முனைந்தான் கேள்வி ஒன்றை..

என்ன இன்று  பகலில் நிலவு?
என்னருகிலேயே!! அதுவும் 
இவ்வளவு நெருக்கத்தில்..!!

சின்னதொரு புன்னகையில் 
சிட்டாய் அவள் பதில் சொன்னாள்.
ஒளி கொடுத்தச் சூரியனுக்கு ஒரு 
தினமேனும் நன்றி சொல்ல 
இந்தத்  திங்கள் இன்று  பகலில் 
வந்தேன்..

உன்  இதழால்  சொல்லும் வார்த்தை விட 
எழுதும் வார்த்தை எத்தனை அழகென்று 
நீ அறிவாயா?

ஒரு முறை எழுதிவிட்டுச் செல்..
மறு முறை இந்த நிலவு  தரிசனம் 
தரும் வரையில் நித்தம் படித்து 
நெஞ்சுக்குள் பூத்திருப்பேன்..

அச்சம் வந்து அவளைக் கொல்ல 
அப்படியே நின்றிருந்தாள்..
அவள் வார்த்தை எழுதக்  காத்திருந்தவன் 
அருகில் வந்துக்  கைபிடித்தான்..

வேங்கை அவன் கைப் பட்டதும் 
மங்கை அவள் சிவந்துப்  போக 
அவள் சிவப்பழகை பார்த்திட்ட 
மஞ்சள் வெயில் மேகம் கொஞ்சம் 
கோபம் கொண்டுக்  கருத்துப் போக 
கார்மேகம் வந்துச் சூழ்ந்துக் கொள்ள 
கண்சிமிட்டும் நேரத்தில் மழை வந்து 
கலைத்திட்டது அவன் பெற 
இருந்த வார்த்தையை....

Sunday, May 12, 2013

பிடிக்கிறது.......ரொம்பப் பிடிக்கிறது...







பிடிக்கிறது..என்னை மட்டுமே  பிடிக்கிறதென்னும் உன் பிடிவாதம்  ரொம்பப் பிடிக்கிறது...


பிடிக்கிறது..என்னை அழகியென்று வர்ணிக்கும் 
உன் பொய்கள் ஒவ்வொன்றும் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என்னை அழவைக்கும்  உன் வார்த்தைகள் வார்த்த வலி ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என்னைச் சிவக்க வைக்கும் உன் சில்லென்ற சில்மிஷங்கள் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என்னைத் தோள் சாய்த்து தோல்வி பயம் நீக்கும் உன் தோள்கள் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது.. நீ கடந்துச் செல்லையில்  என்னைக் கடத்திச் சென்ற ஓரக்கண் பார்வை ரொம்பப்  பிடிக்கிறது..


பிடிக்கிறது..பெரியச் சண்டைக்குப் பின் சிந்திடும் உன் சின்னப் புன்னகை ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என் பேசா மௌனத்தையும்  மொழி பெயர்க்கிற உன் புரிதல் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..பிடித்தவளுக்காக உனக்குப் பிடித்ததைக்  கூட நீ விட்டுக் கொடுப்பது ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..அருகில் இல்லாத போதும் என் நினைவுகளை ஆழமாய் சுமக்கும் உன் நெஞ்சம் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..இன்னல் தான் வாழ்க்கை என்றாலும் என்னை இழக்கும் எண்ணமில்லாத உன் உறுதி ரொம்பப் பிடிக்கிறது...

அந்த இரண்டு வார்த்தைகள் எவை ??




அவனுக்கும் எனக்குமான உறவைச் சொல்லிடும் வார்த்தை..

அவனுக்கும் எனக்குமான நெருக்கத்தைச் சொல்லிடும் வார்த்தை..

அவனுக்கு என் மீதான உரிமையைச் சொல்லிடும் வார்த்தை..

அவனால் என் ஒருத்திக்கு மட்டுமே தரப்படும் வார்த்தை ..

அவன் ஒருவனிடம் இருந்து மட்டுமே நான் பெற்றுக் கொள்ளும் வார்த்தை..

அவன் காதல் மொழியையும் ,அதட்டல் மொழியையும் 
அறிந்திட உதவும் வார்த்தை..
.
.
.
.
.

அட அது வேற ஒன்னுமில்லைங்க..." வாடி போடி "






Thursday, May 9, 2013

தமிழக அரசே மாற்றி அமைத்திடு உன் மண்ணாங்கட்டி தேர்வு முறையை!!





இந்தியாவின் இன்றைய கல்வி முறையில் அதிகம் உடன்பாடு இல்லாமல் அதிருப்தியுடன் இப்படி ஒரு பதிவை எழுத காத்திருந்தேன் .பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயத்தை இப்போது பயன் படுத்திக் கொண்டேன்.

கனா கண்கிறேனின் முதன்மையான சமுதாயக் கனவு இந்தியாவில் குறிப்பாக தமிழக கல்வி முறையில் நிச்சயம் ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதே.

எனது இந்தப் பதிவின் நோக்கம் நமது கல்வி முறை வெறும் ஓட்டப் பந்தயக் குதிரைகளை மட்டுமே உருவாக்குது அதையும் அரசு பொதுத் தேர்வு என்ற முறையில்..எங்கே இருக்கிறது உங்கள் பொது..

எதைக் கொண்டு மதிப்பெண் முறையில் 100 வாங்கியவன் புத்திசாலி எனவும் 60 வாங்கியவன் சராசரி  எனவும் தீர்மானிக்கிறீர்கள்.அறிவியலில் 100 மதிப்பெண் வாங்கியவனைக் கூட ஒரு சுவர் கடிகாரம் எந்த முறையில் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது என்றுக் கேட்டால் கூட விவரிக்கத் தெரியாத ஒரு கல்வியைத் தானே கொடுத்திருக்கிறீர்கள்.

கடந்த வருட விடைத் தாள்களை கரைத்துக்  குடித்து அதை தேர்வில் வாந்தி எடுத்து மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றுவிட்டால் கொண்டாடுகிறீர்கள்.
பாடம் புரிந்தால் மட்டுமே படிக்க இயலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அடுத்தவருடன் ஒப்பிட்டு பேசி அவனைப் பற்றி அவனுக்கே தாழ்வு மனப்பான்மை உண்டு பண்ணிவிடுகிறீர்கள்.

இதயெல்லாம் கூட நான் பொறுத்துக் கொள்வேன்.பறக்கும் படை என்ற பெயரில் பயமுறுத்துகிறீர்களே அதை மட்டும் பொறுக்க முடியவில்லை.

இந்தியாவில் படிப்பைக் தொடர முடியாமல் கைவிடுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான்.ஒன்று ஏழ்மை இன்னொன்று தோல்வி.ஏழ்மையிலும் எத்தனையோ மாணவர்கள் சாதிக்கிறார்கள்.அவர்களுகெல்லாம் பண உதவி மட்டும் போதாது தேர்வு முறையை எளிதாக்கியும் உதவிட வேண்டும்.தேர்வு முறைகள் மாறினால் தேர்ச்சிகள் எளிதாகும்.

எதனைக் கொண்டு இதனை பொதுத் தேர்வு என்று சொல்லுகிறீர்கள்???

"பொது" என்ற வார்த்தையின் அர்த்தமென்ன??,அனைவருக்கும் பொதுவான முறையில் இருக்க வேண்டும்.பாரபட்சமில்லாமல் ஊழலில்லாமல் அவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்பது தானே.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியான முறையில் தானே மாணவர்கள் தயார் செய்யப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அப்படியா நடக்கிறது தமிழ் நாட்டில்??

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியால் கடுமையான கேள்விதாள்களுக்கு பதிலளிக்கும் முறையில் தயார் செய்யப் படுகின்றனர்.உதாரணமாக நான் படிக்கும் காலத்தில் என் பள்ளிக்கு கேள்வித் தாள்கள் பாளையங்கோட்டையில் இருந்து வரும்.பள்ளியில் நடத்தப்படும் எல்லா தேர்வுகளும் கடுமையாக இருக்கும். அவற்றில் நாம் 60 சதவிகிதம் எடுத்துவிட்டால் போதும் பொதுத் தேர்வில் 80 எடுத்து விடலாம்.இதன் அடிப்படையில் தான் தனியார் பள்ளி மாணவர்கள் வெல்கிறார்கள்.

அரசு பள்ளிகளில் படிப்போர் ஒரே மாதிரியான எளிதில் அவர்கள் பள்ளியிலேயே அவர்கள் ஆசிரியரால் தயார் செய்யப் படும் கேள்வித் தாள்களுக்கு விடை அளிக்கிறார்கள்.அதனால் எப்போதும் ஒரே நிலையில் இருக்கிறது அவர்களின் மதிப்பெண்கள்.

இப்படி வெவ்வேறு முறையில் மாணவர்களை தயார் செய்து, பந்தயத்தில் ஓட விடுவது,தயிர் சாதம் சாப்பிடறவன பாத்து மாமிசம் சாப்பிடறவன் குஸ்தி க்கு வரியான கூப்பிட்ட கதையா இருக்கு.

எப்போது மாறும் இந்த நிலை..தமிழ் வழியே அரசு பள்ளியில் படித்து தானே அப்துல் கலாம் சாதித்தார்.அந்தக் காலத்தில் எல்லாம் 8 ஆம் வகுப்பு படித்தால் போதும் ஆசிரியர்  ஆகி விடலாம்.இப்பொது அதற்கும் M.Ed வரை படிக்க வேண்டி உள்ளது.

வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்றார் போல் பாடங்கள் மாற வேண்டும்  சொல்லித் தரப்படும் முறையும் தேர்வு முறைகளும் மாறவேண்டும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகை அந்நாட்டின் மிகப் பெரும் பலம்,அது ஒரு போதும் பலவீனம் இல்லை.நம் மக்கள் தொகையின் படி நாம் இந்நேரம் ஆயிரம் அப்துல் கலாமை பெற்றிருக்க வேண்டும்.

கரைத்துக் குடிக்காமல் எதை கேட்டாலும் திருக்குறள் போல் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கல்வி கிடைத்தால் நாம் நிச்சயம் ஆயிரம் கலாமை பெறுவோம்.

தோல்விகளை தூக்கி பேசியதால் நான் அதிகம் தோல்வி கண்டவள் என்று நினைக்க வேண்டாம்.

பத்தாம் வகுப்பில் 90.8 விழுக்காடும், பன்னிரெண்டாம் வகுப்பில் 85 விழுக்காடும் பெற்றிருந்தேன். இந்தப் மதிப்பெண் பெற நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை.படிப்பதற்கான சூழ்நிலையை என் வீடு எனக்கு எப்போதும் தந்ததில்லை.வகுப்பை முடிந்த அளவு கவனித்து விடுவேன்.அதை தாண்டி என் கையெழுத்து எனக்கு கொஞ்சம் கை கொடுத்தது.

பொதுவாக பெண்கள் எல்லாம் படிப்ஸ் என்பார்கள் .நான் நேரெதிர் , ஆண்களுக்கு இணையாய் விளையாட்டுப் புத்தியுடன் இருப்பேன்.தேர்வின் முதல் நாள் நான் டிவி பார்த்தாலும் பார்க்காதே ஐயோ போச்சு அம்மா போச்சு என்று என் பெற்றோர் ஒரு நாளும் கத்தியதில்லை.

அதன் பின் ,பொறியியல் இளங்கலையை இந்தியாவில் முடித்து பேற்படிப்பை பிரான்சின் முன்னனி அரசு  பல்கலைகழகத்தில்  தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடன் படிக்கும் எல்லோரும் இங்கேயே பிறந்து வளர்ந்து அவர்கள் கல்வி முறையில் படித்தவர்கள்.அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கான அடித்தளத்தை நான் பெறவில்லை.இருந்தும் நான் துவண்டு போகாமல் முண்டி அடித்து வென்றுக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம். "பந்தயம் இல்லை, இது முதல் குதிரை இது இரண்டாம் குதிரை என்றப் பேச்சில்லை.அவன் படிக்கிறான் உன்னால் ஏன் முடியவில்லை என்ற கேள்வி இல்லை,மற்ற மாணவர் முன் கேள்வி கேட்டு என்னை அசிங்கப் படுத்துவதில்லை.தெரியவில்லை என்ற பதிலை நான் தைரியமாக சொல்லும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.எனக்கு பயமில்லை".

பக்கம் பக்கமா பதிலளிக்கும் கேள்விகளைத் தவிர்த்து பாடத்தின் நடை முறை பயன் பாட்டை அறியும் படி கேள்வி கேட்டால், எந்த ஒரு பாடமும் புரிந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும், என்ற ஒரு தேர்வு முறையைத் தான் நான் கனவு காண்கிறேன்.தேர்வுகள் நடப்படுவதின்  முக்கிய நோக்கம் மாணவன் பாடத்தை புரிந்திருக்கிறானா ??என்று ஆராய்வது மட்டுமே.இதனைத்  தாண்டி வேற எந்த நோக்கமும் என் அறிவுக்கு எட்டவில்லை.

அன்புடன்,
ஆதிரா.


நன்றி ம்மா , நன்றி ப்பா







1) என் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைத்து என்னையும் ஒரு பொம்மையைப் போல் வளர்க்காததற்கு நன்றி..


2) நான் கேட்டதை விட அதிகமாக என் கையில் திணிக்காமல் ஏனைய நேரங்களில் இல்லை என்ற பதில் தந்ததற்கு நன்றி..


3) நான் எங்கு செல்கிறேன் யாருடன் பேசுகிறேன் என்று கவனித்து வளர்த்ததற்கு நன்றி..


4) என் முகம் கொஞ்சம் சுருங்கிட்டால், உடனே அதன் காரணம் அறிய முயர்ச்சித்ததற்கு நன்றி..


5) பள்ளி முடிந்து வந்தால் படி படி என்றென்னை கொடுமை செய்யாமல் இருந்ததற்கு நன்றி..


6) டிவி பார்க்க கூடாது , யாருடனும் பேசக் கூடாது என்றென்னை சிறையில் அடைத்து பத்தாம், பனிரெண்டாம் பொதுத்தேர்விற்கு தயார் செய்யாததற்கு நன்றி..


7) படிப்பு விடயத்தில் என்னை என் போக்கிற்கு விட்டு வளர்த்ததற்கு நன்றி..


8) ஒன்றாய் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தந்ததற்கு நன்றி..


9) நீ இதை கற்றுக் கொள் அதைக் கற்றுக் கொள் என்று எப்போதும் ஆலோசனை சொல்லி சொல்லி எனக்கு வெறுப்பை உண்டாக்காமல் வாழ்க்கைப் பாடத்தை மட்டுமே கற்றுத் தந்ததற்கு நன்றி..


10) சைக்கிள் முதல் scooty வரை ,சமையல் முதல் வீட்டு வேலை வரை எல்லாவற்றையும் நானே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளுவதை தூரமாய் நின்று ரசித்ததற்கு நன்றி..


11) என் விருப்பம் போல் உடையணிய என்னை அனுமதிக்காததற்கு நன்றி..


12) ஒரு வயது வரை என்னை அடித்து உதைத்து வளர்த்ததற்கு நன்றி..


13) நான் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வரை என் கைகளை இறுக்கப் பிடித்திருந்தமைக்கு நன்றி..


உங்களின் இல்லை என்ற பதிலால் இன்று எது கிடைக்காவிட்டாலும் நான் அழுவதில்லை.இன்று நான் எதுவாய் இருக்கிறேனோ அது உங்கள் வளர்ப்பினால் தரப்பட்டது..


நன்றி ம்மா , நன்றி ப்பா.


Saturday, April 20, 2013

கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.



தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின்  கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

இந்த இடுக்கையின் நோக்கம் கற்பில் சிறந்தவள் யார்? என்று இருவரையும் ஒப்பிடுவதல்ல.வரலாறு நமக்கு சொல்லவருவதை, நாம் சரியாக எடுத்துக் கொள்கிறோமா? என்பது தான்.நம்  வரலாற்று காப்பியங்களிலும், சரித்திரங்களிலும் மறைந்துவிட்ட  பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி மறைந்து, மறந்துக் கிடக்கும்  மாதவியின் புகழ் உரைப்பதே இந்த இடுக்கையின் நோக்கம்.

நான் சிலப்பதிகாரத்தை எனது 15 ஆம் வயதில் பத்தாம் வகுப்பில் படித்தேன்.என்னை கேள்விக் கேட்டு எழுப்பிவிடுவதையே வழக்கமாகக் கொண்ட என் தமிழ் ஆசிரியை அன்றும், சிலப்பதிகாரத்தை நடத்தி முடித்து விட்டு, "ஆதி பாடம் புரிந்ததா??இப்போது சொல் "கற்பில் சிறந்தவள் யார் என்றார்??"

தயக்கமே இல்லாமல் கண்ணகி என்று பதிலளித்தேன்.விளக்கும் கொடு என்றார்.

தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிருபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்று பதிலளித்தான்.

இல்லை என மறுத்து எனக்கு மாதவியின் புகழை புரியவைத்த என் ஆசிரியரின் விளக்கம் பின்வருமாறு.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன்  மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதை தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத்  தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல  பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக்   கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம்  இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்  பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும்  தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாக சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியை சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம்.அவள்  அவ்வாறுச்  செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும்  வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள்  அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச்  சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி.தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச்  சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச்   சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா  என்றறியேன் நான்.ஒருவேளைக்  கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச்  சூழ்நிலையிலும், தவறு செய்ய  வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.


இந்தப் பதிவை மாதவியின் புகைப் படத்துடன் பதிவிடத்தான் ஆசைகொண்டேன் .அவளின் நல்லதொருப்  புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை இணையத்தில்.

அன்புடன்,

ஆதிரா.


Saturday, April 13, 2013

அயல்நாட்டில் என்னை அசரவைத்தவர்கள்...

 நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத நேரம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை.ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள்.

அப்படி என்னை அயல்நாட்டில்  அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத்  தான் எழுதியிருக்கிறேன்.




1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa  என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள்.

2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா ??உனக்கு சேலைக் கட்டத் தெரியுமா??எப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா ?? என்றுக் கேட்ட வெள்ளைக்காரப்  பெண்கள் கூட்டம்.

3) பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த குழந்தையாயிற்றே என்று "salut , tu vas bien??" என்றால் "அக்கா நான் நல்லாத்  தமிழ் பேசுவேன்" என்றென்னை செருப்பால் அடித்த என் நண்பரின் குழந்தை.

4)  உள்ளூரில் இருக்கும் பெண்களில் பலரும்   அயல் நாட்டு மோகத்தில் அலைகையில், அயல் நாட்டின் அன்றாட வாழ்வில் ஊறிப்போன பின்னர் கூட உடையில் கவனமாய் இருந்து , இன்னும் கல்லு வச்ச மூக்குத்தியை மாற்றி வளையமாக்காத எம் குலப் பெண்கள்(ஒரு சிலரே).

5) ஐரோப்பிய வெள்ளை அழகிகள் ஆயிரம் இருக்க, அயல் நாட்டிலேயே வளர்ந்தும் தமிழ் பெண்களையே தேடிப்பிடித்து காதலிக்கும் எம் குல ஆண்கள்.(ஒரு சிலரே).

6) உனக்குப்  பரத நாட்டியம் ஆடத் தெரியுமா?? என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர்.இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா??.அவர் ஒரு ஆப்பிரிக்கர்.தென் ஆப்பிரிக்காவின் மிகவும்  பின் தங்கிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்.சென்னையை பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ்கலாச்சாரத்தைப் பற்றியும் கேள்வி கேட்டே என்னைக் கொல்லுபவர்.

7) 18 வயதானால் போதும் பெற்றோரைப் பிரிந்துப்  பிள்ளைகள் தனியே வாழலாம் எனும் கலாச்சாரத்திலும் பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து எங்கே செல்கிறாய்?? யாருடன் செல்கிறாய்?? என்று கேள்வி  கேட்கும்  பெற்றோர்கள்.(பிள்ளைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெற்றோர்களும் ஒரு சிலரே )


8) ஐரோப்பாவின் தட்பவெப்ப சூழலிலும்  வாழ்கை முறையிலும்  நன்றாக பழகிவிட்டாலும் "சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது "என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்.


9) ஆங்கில வார்த்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பேசினால் பரிசு எனும் போட்டி நடத்தும் நிலைமை உள்ளூரில் இருக்க, தமிழை பள்ளியில் கற்க வாய்பில்லாத போதும், தனியே தமிழ் பயின்று இசை முதல் கவிதை போட்டி வரை கலக்கும் மாணவர்கள்.

10) இவைகளையெல்லாம் தாண்டி பாரீஸ் நகரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் இயங்கும் தமிழ் கடைகளில் பெரிய தமிழ் எழுத்துக்களில்  பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள்.வரிச்சலுகை வேண்டுமானாலும் தருகிறோம் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என்று எவரையும் கெஞ்ச வேண்டிய நிலைமை இல்லை.


இதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், நாம் யார்? என்று நம்மில் பலருக்குத் தெரியாவிட்டாலும் நம்மவர் இல்லாத பலருக்குத் தெரிந்திருக்கிறது.


அன்புடன்,
ஆதிரா.









எனது கிறுக்கல்களையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் மக்களே....













Tuesday, April 2, 2013

கைப்பேசிக்கு ஒரு கண்ணீர் கடிதம்..

என் கதிரவனின் காலை வணக்கத்தை
குறுஞ்செய்தியில் கொண்டுவந்து என்

காதில் ஒலித்து என்னை கண்விழிக்க
வைத்திடுவாய் நீ..

என் ஏகாந்த இரவுகளில் இளையராஜாவின்
இசை ராஜாங்கத்துடன் எனக்கு துணை
இருந்திடுவாய் நீ..

என்னவனின் குரல் கேட்க
உன்னையே நோக்கி தவமிருக்க
சிணுங்கல் கொண்டு என்னை சிரிக்க
வைத்திடுவாய் நீ..

சத்தமில்லாத முத்தத்திலும்
சத்தம் சேர்த்து எனக்கென
சிறப்புப் பரிசாய் தந்திடுவாய் நீ..

என் சந்தோஷங்கள் முதல் சங்கடங்கள் வரை
சகலமும் தாங்கி நின்றிடுவாய் நீ...

காத்திருப்பதெல்லாம் சுகமென எனக்கு
கற்றுத் தந்தாய் நீ ...

என் காதலின் ஆணி வேராய் இருந்து
ஆரம்பித்த நாள் முதல் அச்சுமுறியாமல்
என்னை அரவணைத்தாய் நீ..

அதனாலோ என்னவோ அதிகமாய் நேசித்தேன்
உயிரெனப் பாவித்து உள்ளங்கையில் அடக்கி
ஒரு கனமும் உன்னை பிரியாமல் இருந்தேன்..

உன்னை என்னிடமிருந்து பிரிக்கத்தான்
வந்ததோ வம்பு அன்று..
வாயடித்துப் பேசுகிறேன் என வஞ்சிட்டான்
வந்ததொரு கோவம் அவன் வாய்மொழியால்..

சினம் கொண்டு செய்வதறியாது நின்றேன்..
என் வார்த்தைகளைச் சுமந்து எனக்கென
சிறம் தாழ்த்தி பல முறை நின்ற உன்னிடமே
என் சினத்தை உமிழ்ந்தேன்..

அடித்து நொறுக்கினேன் அங்கம் உதிர்ந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆனாய்..
அகந்தை அடங்கியதும் அகம் சொல்லிட்டது
அவள் உன்னுடன் இல்லை என்று..

சிதறிய உன்னை சேர்த்தெடுத்து அணைத்தேன்
சிரிப்பொலி இல்லாத உன் அமைதி சொன்னது நீ
செத்துவிட்டச் செய்தியை..

அவனுடனான ஊடல் அடுத்த நாளே முடிவுற்றது.
அங்காடி பல அலைந்து திரிந்தும் உன்னை மட்டும்
என்னால் பழையதாய் மீட்கமுடியவில்லை.

பழுது பார்த்தும் பயனில்லை
புதியதை ஏற்கவும் மனமில்லை.
புரிந்தது ஒன்று மட்டும், அர்த்தமற்ற
ஆத்திரம் அழிவைத் தானே தரும்.

அழித்திட்டேன் உன்னை இனி
அழுதென்ன இலாபம்..