Saturday, June 1, 2013

வாழ்க்கை அனைத்தையும் கற்றுத் தரும் வாழவும் கற்றுத் தரும்.


இன்று வகுப்பில் இருக்கையில் என் அம்மாவிடம் இருந்து missed cal மேல் missed cal .வகுப்பு முடிந்ததும் , வெளியே வந்து call பண்ணி என்னம்மா என்றால் ,  "  நம்ம பவி  (என் அத்தை  மகள் ) உனக்கு உடனே போன் பண்ண சொல்லி ஒரே தொல்லை".இவ்வளவு நேரம் காத்திருந்து இப்ப தான் வீட்டுக்கு போனான்னு சொன்னாங்க.ஏன் மா ன்னு கேட்டேன்.அவள் 456 மதிப்பெண் எடுத்திருக்கா, இப்ப தான் ரிசல்ட் வந்துச்சு, அவ என்ன படிக்கறதுன்னு இப்பவே உன்னட கேக்கனுமான்னு சொன்னாங்க.சரி மா நான் வீட்டுக்கு போய் பொறுமையா அவ கிட்ட பேசறன்னு சொன்னேன்.நான் என்ன மார்க் எடுத்தேன்னு பவி கேட்டடிருப்பா கண்டிப்பா , அதுக்கு நீ என்னமா பதில் சொன்ன என்றுக் கேட்டேன்.நான் பத்தாவது எழுதி வருடங்கள் பத்தாகி விட்டதால் அம்மா நிச்சயம் மறந்திருப்பார் என்றறிவேன்.


எங்க பவியின் இப்போதைய ஆர்வம் அவள் என்னை விட அதிகம் மார்க் எடுத்திருக்கிறாளா? என்பதை தெரிந்துக் கொள்வது தான்.இந்த உண்மை புரியாத அம்மா ,  தன் பிள்ளையை விட்டுத் தராமல் அவள் (நான்) 466 மதிப்பெண் பெற்றாள் என்றுத்  தவறாக சொல்லி விட்டார்.அவ்வளவு தான் ,எங்க பவியின் அழகிய முகம் சட்டென  எப்படிச் சுருங்கிருக்கும் என்று என்னால் கற்பனைச் செய்ய முடிகிறது.

பவி வந்தால் அவள் என்னை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்திருக்கிறாள், நான் வாழ்த்துச் சொன்னேன் என்றுச் சொல்லி ஊக்கப் படுத்து மா .அவள் இன்னும் சந்தோசப் படுவாள் என்றுச் சொல்லி முடித்து போனை வைத்தேன்.


மாலை வீடு திரும்பிய பின், எங்க அத்தை வீட்டுக்கு போன் பண்ணி பேசினேன்.பவியை மேற்கொண்டு எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற கேள்விக்கு என்னால் முடிந்த வரை எங்க ஊர் பள்ளிகளை ஆராச்சி செய்து ஆலோசனை மட்டும் சொல்லி, அவர்களை முடிவு செய்து கொள்ளச் சொன்னேன்.நான் ஊரைப் பார்த்து வருடங்கள் பல ஆகுது. எல்லா பள்ளிக் கூடங்களும் நான் பார்த்த நிலைமையில் தான் இருக்கா?இல்லை மாற்றம் உண்டா என்றறியேன்.என்னால் முடிந்த வரை நல்ல ஆலோசனை சொல்ல முயற்சித்தேன்.


பவி லைன்லில் வந்ததும், வாழ்த்துச் சொன்னேன்.பள்ளியில் யாரடி முதலிடம்? வட்டார முதலிடம் (Regional first ) எந்தப் பள்ளிப்  பெற்றிருக்கிறது.அவள் படிக்கும் (அங்கு தான் நானும் படித்தேன் ) பள்ளி முதலிடம் பெறுவது தான் வழக்கம்.முதலிடம் பற்றிய விவரம் அறிவதில் எனக்கு ஆர்வமில்லை.அந்த விவரங்களை பவி அறிந்திருக்கிராளா? என்பதே என் ஆர்வம்.


பவி," அதெல்லாம் யாருக்குத்  தெரியும்.நான் அதுலாம் பாக்கல, யார் வந்தா நமக்கென்ன ? என்றால்.சபாஷ், மிகச் சரியான பதில்.இந்த பதிலை தான் நான் விரும்புகிறேன். ஆக, இவளுக்கு யார் மதிப்பெண் மீதும் ஆர்வமில்லை, என்னைய விட மிஞ்சிட்டமானு மட்டும் செக் பன்னிருக்கான்னு புரிந்தது.


பெற்றோர் பிள்ளைகளுக்கு  அடுத்தவரை ரோல் மாடலாய் காட்டுகிறோம் என்ற பெயரில் அடுத்தவருடன் ஒப்பிடும் விளைவே பிள்ளைகள் தங்களைத் தாங்களே அடுத்தவருடன் ஒப்பிட்டுக் கொள்வது .  என் அத்தைக்கும் மாமாவுக்கும் பவித்ரா என்னை போல் வர வேண்டும் (நான் ஒன்றும் கிழித்து விட வில்லை, என் குடும்பத்தைக்  காக்கும் கடமை எனக்கு தரப்பட்டிருப்பதாக இளவயதிலேயே உணர்ந்தேன். அதற்காக முயற்சிக்கிறேன், அவ்வளவு  தான் ). பொருளாதாரத்தால் நலிவடைந்து இருக்கும் அந்தக் குடும்பத்தையும் பவி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பை அவள் என்னிடம் இருந்து கற்க வேண்டும் என்பதே என் அத்தை மாமாவின் விருப்பம்.ஆனால் அதற்கு அவர்கள் கையாளும் முறை தான் தவறு.



அடிக்கடி என்னை உதாரணம் காட்டுகிறேன் என்ற பெயரில் ஆதி யை போல் வர வேண்டும்,அவளால் தான் நம்ம அத்தை இன்று  சந்தோசமாக இருக்கிறாள், அப்படி இப்படி என அளந்து விடுவது.என்னைக் கண்டாலே 8 வது படிக்கும் என் மாமா பையன் (பவித்ராவின் தம்பி)பேயைப் பார்ப்பது போல் பயந்து ஓடுகிறான்.தொலைபேசியில் கூடப் பேசுவதில்லை.நான் அவன் படிப்பு, மதிப்பெண் என்று கேள்வி கேட்டு அவனை துன்புறுத்துவேன் என்றப்  பயம்.அப்பனா பாத்துகோங்க எந்த அளவுக்கு என்னைய பத்தி பில்ட் அப் பண்ணிருப்பாங்கன்னு. !! 


பவித்ரா என்றும் ஆதிரா ஆக முடியாது , ஆதிரா என்றும் பவித்ரா ஆக முடியாது என்பது தானே நிதர்சனம்.பெற்றோரின் துன்பங்களை பார்த்தே வளரும் பிள்ளைகள் எந்தச் சூழலிலும் பாதை தவறாது.கவனம் சிதறாது.அவர்களுக்கு எந்த உதாரணமும், ரோல் மாடலும் தேவைப் படாது.அப்படி தான் , பவிக்கும் எதுவும் தேவை இல்லை.அவள் நிச்சயம் பொறுப்பான,ஊர் மெச்சும் பிள்ளையாக வருவாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.நான் அவள் பக்கம் இல்லை என்றால் கூட,நிச்சயம் வருவாள்.


பவிக்கு என் ஆலோசனை எல்லாம் "பாதை உன்னுடயைது.தேர்வு செய்யும் உரிமை உன்னுடையது. உனக்கு முன்பே அந்தப்  பாதையை கடந்தவள் என்ற முறையில், கற்கலும் முட்களும் இருந்தால், பாத்து நட என்று உன் கை பிடிக்கும் கடமை மட்டுமே என்னுடையது ".

பெற்றோர்களே திருந்துங்கள. பிள்ளைகளை எவருடனும் ஒப்பிடாதீர்கள்.அவர்களை ஊக்கப் படுத்துவதாக இருந்தாலும் சரி தாழ்வு படுத்துவதாக இருந்தாலும் சரி, ஒப்பிட வேண்டாம்.அது ஒரு போதும் அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவாது.வழிகாட்டல் வேறு , ஒப்பீடல் வேறு.முடிந்தால் நீங்கள் சிறந்த வழிகாட்டியாய் இருங்கள், இல்லை சிறந்த வழிகாட்டியை உருவாக்கித் தாருங்கள். கல்வி விடயத்தில் பிள்ளைகளை அவர்கள் வழியில் விடுங்கள்.வாழ்க்கை அனைத்தையும் கற்றுத் தரும் வாழவும் கற்றுத் தரும்.

13 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்
    ஒப்பிடல் மூலம் எவ்வளவு பெரிய தவறைச்
    செய்கிறோம் என்பதை பெற்றோர்கள் அறிவதே இல்லை
    சொல்லவேண்டிய கருத்தை மிகச் சரியான நேரத்தில்
    மிக அழகாகச் சொல்லிச் சென்றது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உண்மை... உண்மை... பெற்றோர்கள் உணர வேண்டிய உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நேரம் கிடைப்பின் வாசிக்க : இனி குழப்பமே இல்லை…!

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/04/There-is-no-confusion.html

    நன்றி...

    ReplyDelete
  4. அனைத்தையும் கற்றுத் தரும்
    வாழவும் கற்றுத் தரும்.வாழ்க்கை ...!

    ReplyDelete
  5. //பவித்ரா என்றும் ஆதிரா ஆக முடியாது , ஆதிரா என்றும் பவித்ரா ஆக முடியாது என்பது தானே நிதர்சனம்//
    .
    வைரமான வரிகள்.ஒப்பிடல் என்பது அடிப்படையில் நமது நிம்மதியைக் குலைக்கும். இன்னொரு பேருந்து நாம் செல்லும் பேருந்தை முந்தி விட்டாள் கூட டெண்சன் ஆவோர் உண்டு. பதிவுக்கு வாழ்த்த்க்கள்.

    ReplyDelete
  6. எனது முகநூல் தளத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  7. "பவித்ரா என்றும் ஆதிரா ஆக முடியாது , ஆதிரா என்றும் பவித்ரா ஆக முடியாது என்பது தானே நிதர்சனம"

    உண்மை.

    ReplyDelete
  8. // "பாதை உன்னுடயைது.தேர்வு செய்யும் உரிமை உன்னுடையது. உனக்கு முன்பே அந்தப் பாதையை கடந்தவள் என்ற முறையில், கற்கலும் முட்களும் இருந்தால், பாத்து நட என்று உன் கை பிடிக்கும் கடமை மட்டுமே என்னுடையது ".// அருமை அருமை! நீங்கள் சொல்லியிருப்பது உண்மையிலும் உண்மை.

    ReplyDelete
  9. My hearty wishes to pavithra...... god bless her ....

    ReplyDelete